Monday, April 25, 2011

மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் - உயிரினம்


அணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான்.


கரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம் தோன்றுவதற்கு முன். அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை.


உலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாகும்.

தற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி தலை நெஞ்சு வயிறு எனும் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கு மூன்று சோடி கால்களும்ஒரு சோடி உணர்கொம்பும் உண்டு.கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாது. இரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறமுடையது! இவற்றால் தலை துண்டிக்கப் பட்டாலும் சுவாசிக்க முடியும்!!(சில கரப்பான் பூச்சிகளால் வளி இல்லாமல் 45 நிமிடங்கள் வழமுடியும்.)

உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனம் Giant burrowing cockroach ஆகும். இது ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது.இது 9 சென்ரிமீட்டர் வரை வளரக்கூடியது. இதன் நிறை 30 கிராமை விட அதிகமாக இருக்கும்.


இந்த கரப்பான் நிலத்தை 3 அடி(1 மீட்டர்) அழத்திற்கு தோண்டி வசிக்கின்றது.இதன் காரணமாகவே இதற்கு Giant burrowing cockroach என பெயர் வந்தது. (burrow-பூமியில் வளை தோண்டு). இதற்கு சிறகுகள் கிடையாது.


கரப்பான் பூச்சியின் உணர்கொம்புகள் சூழலை அறிய உதவுகின்றது. இரவில்(இருட்டில்) உணவு வேட்டையை செய்யும். இவை எந்த பாகுபாடுமில்லாமல் எல்லாவிதமான உணவையும் வெட்டியும் அரைத்தும் உண்கின்றன. அப்படி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் காகிதம் சவர்க்காரம் போன்றவை கூட உணவாகும். இதற்கு இதன் வலிமை வாய்ந்த தாடைகள் உதவி செய்கின்றன. சில சமயம் உணவே கிடைக்காமல் கரப்பான் பூச்சியினால் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழ முடியும்!


ஆஸ்துமா ஆபத்து கரப்பான் பூச்சிகளால் ?


உங்கள் வீடுகளில் அதிக அளவில் கரப்பான் பூச்சிகள், எலிகள் உள்ளதா? உடனடியாக அவற்றை ஒழிக்க முயற்சி எடுங்கள். இல்லாவிட்டால், அவற்றின் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வீசிங் எனப்படும் மூச்சுத்திணறல், கடுமையான காய்ச்சல், எக்ஸிமா எனப்படும் ஒவ்வாமை நோய் போன்றவை 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பரவுவதற்கு கரப்பான் பூச்சிகளும், எலிகள் மூலம் வெளிப்படும் ஒருவகை புரோட்டீனும் காரணமாக அமைவதாக கொலம்பியா குழந்தைகள் சுற்றுப்புற சூழல் சுகாதார மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


கரப்பான் பூச்சிகள், எலிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், உடல்நிலையில் ஏற்படும் அறிகுறிகள் பற்றியும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டனர்.
வீட்டிற்குள் உருவாகும் ஒவ்வாமையில் கரப்பான் பூச்சிகளும், எலிகளும் முக்கியப் பங்கு வகிப்பது கண்டறியப்பட்டது. அதிலும் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு அவை காரணமாக இருப்பது தெரிய வந்தது.


கரப்பான் பூச்சியின் மூளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆற்றல்

கரப்பான் பூச்சியும் வெட்டுக்கிளியும் மனிதரின் உயிர் காக்கும் மருத்துவர்களாக மாறும் நாள் தொலையில் இல்லை என இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் லீ என்பவரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பூச்சிகளின் மூளையில் காணப்படுகின்ற வேதிக் கூறுகள் பல தீங்குதரும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கரப்பான் பூச்சி (வட்டார வழக்கில் பாச்சா, பாச்சை) அழுக்கு நிறைந்த சூழலிலும் உயிர் வாழும் தன்மையது. அங்கே தொற்றுநோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும். இருப்பினும் அந்நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி கரப்பான் பூச்சியின் மூளைப்பகுதியில் காணப்படும் வேதிக் கூறுகளுக்கு உள்ளது. கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கப்படுவது வியப்பைத் தருகிறது என்று அறிவியலார் கருதுகின்றனர். நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டால் சாவு உறுதி. ஆனால் கரப்பான் பூச்சியிடம் நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் மிகுதியாகவே உள்ளது.
கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% திறம் கொண்டவையாக உளவாம்.

இக்கண்டுபிடிப்பின் விளைவாக மருத்துவத் துறை பயன்பெறும் என்றாலும் அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

No comments:

Post a Comment