Thursday, December 31, 2009





. வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்."ஓடாத மானும், போராடாத மனித இனமும் வென்றதாக வராலாறு இல்லை"
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் சுனாமி ஏற்படுத்தியவலிகள், வேதனைகள், ரணம் இன்றும் ஆறாத வடுவாக பதிந்துவிட்டது. இன்று நினைத்தாலும் நெஞ்சை நடுங்க வைக்கும் அந்த பேரலைகள், ஏராளமானோர் வாழ்க்கையை பறித்துக் கொண்டன. இதற்கு முன் வேறு எந்த சுனாமியோ அல்லது, வேறு எந்த இயற்கைச் சீற்றமோ இத்தனை நாடுகளில் இத்தனை பேர்களைப் பலிகொண்டது இல்லை.

இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவு அருகே, 2004 டிச.26 அதிகாலை 12 மணி 58 நிமிடத்துக்கு ஏற்பட்ட நிலநடுக் கத்தால், பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சரிந்தன. நிலநடுக்கத்தை அளக்கும் கருவியான சீஸ்மோகிராப் - 8.3 முதல் 10 நிமிடங்கள் வரை நீடித்த நில நடுக்கங்களை அதற்கு முன் எங்குமே பதிவு செய்ததில்லை. உலகில் இரண்டாவது பெரிய அளவாக ரிக்டர் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை இந்த நிலநடுக்கம் பதிவானது. கடலில் தரைக்கு அடியில் 30 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆயிரத்து 600 கி.மீ., நீள நிலத்தட்டுகள் சரிய காரணமாக அமைந்தது. இந்நிலத்தட்டு சரிந்ததால், சரிந்த இடத்தில் இருந்த நிலம் பெயர்ந்து பயங்கர வேகமாக கடல் நீரை தள்ளியது. இதுவே சுனாமியாக உருவாகி, கடற்கரையை தாக்க ஆக்ரோஷமாக புறப்பட்டு சென்றது. கடற்கரையோரம் 100 மீட்டர் உயரத்துக்கு எழும்பி உயிர்களையும் உடமைகளையும் துவம்சம் செய்தது. பூமிப் பந்தை ஒரு செ.மீ., அளவுக்கு அசைத்துப் பார்க்கும் வல்லமையுடன் கூடியதாக இந்த நிலநடுக்கம் அமைந்தது என்றால் அதன் வலிமையை கற்பனை செய்து பாருங்கள்.
இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரை இந்த சுனாமி பலிகொண்டுவிட்டது. தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஏழு ஆயிரம் பேர் பலியானார்கள். இந்தியாவில் பலி 10 ஆயிரத்திற்கும் அதிகமானது. ஆயிரக்கணக் கானோர் சொந்தங்களையும் உடமைகளையும் இழந்து பரிதவித்து நின்றனர். சுனாமி நிவாரணப் பணிகளை அரசும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் மேற் கொண்டாலும் உணர்வுப் பூர்வ பாதிப்பு இன்றும் தொடர்கிறது. சுனாமி உள்ளிட்ட எந்த இயற்கை சீற்றத்தையும் நம்மால் தடுக்க முடியாது . ஆனால் முன்னரே அறிந்து கொண்டால் சேதங்களை தவிர்க்கலாம். கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் சுனாமி அலைகள் ஏற்படு கின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கை கருவிகளால் மட்டுமே முன்னரே அறிய முடியும்.
கடலில் நீர் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தினை இக்கருவி தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் உருவானால் அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறு பாட்டை ஒலி அலைகளாக மாற்றி செயற்கை கோள்களுக்கு அனுப்பி வைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக்கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கை தகவல்களை உடனடியாக தெரிவிக்கிறார்கள். பசிபிக் பெருங்கடலை ஒட்டிய கடல்பகுதியில் இதுபோன்ற நிலநடுக்க எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் 2004ல் இந்திய பெருங்கடலில் எச்சரிக்கை அமைப்பு இல்லை. இது பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகிவிட்டது. கடலில் நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம் பீதியடைவதை தவிர்க்கவும் சுனாமி எச்சரிக்கை கருவிகள் உதவும்.

இந்திய பெருங்கடல் பகுதியில், 2004ல் ஒரு சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் இல்லை. இந்தோனேஷியா கடல் பகுதியில் இருந்த ஒரு சுனாமி எச்சரிக்கை கருவி செயல்படவில்லை. இதனால் சுனாமி ராட்சத அலை வருவதை அறியாமலேயே பலர் அதற்கு பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்துக்குப் பின் பாடம் கற்றுக் கொண்ட இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகள் தற்போது சுனாமி எச்சரிக்கைக் கருவிகளை நிறுவியுள்ளன. இதற்கு யுனெஸ்கோ உதவி செய்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டாலோ அல்லது சுனாமி அலைகள் வந்தாலோ உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள அமைப்பு, 2004ல் இருந்திருந்தால், ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே இந்தியாவில் சுனாமி ஏற்படும் இடங்களுக்கு எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டிருக்கும். அதன்பின்னர் 2 மணி நேரம் கழித்துத்தான் சுனாமி வந்திருக்கும். பெரும்பாலானோர் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

இந்தோனேஷியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதால், ராட்சத அலைகள் இந்தியா வர 3 மணிநேரம் ஆனது. ஒருவேளை இந்தியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தால் அலை விரைவாகவே வந்திருக்கும். ஒவ்வொரு நாட்டின் பேரிடர் நிர்வாகத் துறைகளுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. பொதுமக்களும் இதற்கான எச்சரிக்கைத் தகவலை இ-மெயில் மூலம் பெறலாம். அதற்கு செல்ல வேண்டிய முகவரி: https://lists.unesco.org/wws/arc/tsunamiinformationioc

No comments:

Post a Comment