Wednesday, February 02, 2011

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள்


நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள்



ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.
ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார். 
உதாரணமாக:தங்கம்: குரு, இரும்பு:சனி
உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.
ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக: 
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி), செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன். 
மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன். -------------------------------------- சித்தூர். எஸ். முருகேசன்.

நவக்கிரகத் தோஷங்கள்:
நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.
நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம். 
1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது. 
2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது. 
3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).

1. தேவதைகளுக்கு யாகங்கள்:
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி. 
லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்! 
செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.
2.  கிரகத்தலங்களைத் தரிசிப்பது:
மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?
3. தானம் வழங்குதல்:
நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள்! அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்! 
விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன. 
இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது. 
நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும். 
நான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும். 
ஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து "நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை. அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இனி கிரகங்கள் பேசட்டும்.
1. சூரியன் பேசுகிறேன்
உங்களில் பலருக்கு ஜாதகமேயிருக்காது. உங்களுக்கு ஜாதகம் இல்லாவிட்டலும் பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் தெரியாவிட்டாலும் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேனா? இல்லையா? என்று தெரிந்து கொண்டு தகுந்த பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம்.
கடவுள் பிரதமர்! நவக்கிரகங்களே மந்திரிகள்!!ஒரு பிரதமர் எப்படி மந்திரிகளுக்கு இலாகாக்களைப் பிரித்துக் கொடுக்கிறாரோ அதேபோல் கடவுளும் எங்களுக்கு (நவகிரகங்களுக்கு) இலாக்காக்களைப் பிரித்துக் கொடுத்துள்ளார். நாங்கள் எங்கள் இலாகாவின் கீழ் வரும் விஷயங்கள், விவகாரங்களில் அதிகாரம் செலுத்துகிறோம். நாங்கள் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையிலிருந்தால் நன்மை செய்கிறோம், தீமை செய்யும் நிலையிலிருந்தால் தீமை செய்கிறோம்.
நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் உட்கார்ந்து நன்மை செய்யும் நிலையிலிருந்தால், அதிகாரம் செலுத்தும் விஷயங்களையெல்லாம் வாரி வழங்கிடுவேன். கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா-தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், மேற்பார்வை, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள் இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.
ஆதர்ச புருஷரான தந்தை, அவருடன் நல்லஉறவு, தன்னம்பிக்கை, நாலு பேரை வைத்து வேலைவாங்கும் தொழில், இப்படி உங்கள் வாழ்க்கை இருந்தால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். 
மாறாகப் பல்நோய், எலும்பு முறிவு, தாழ்வு மனப்பான்மை, தந்தையுடன் விரோதம், அடிமைத் தொழில் இப்படியாக உங்கள் வாழ்க்கை நகர்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால், நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.
நான் மட்டுமே அல்ல. வேறு எந்தக் கிரகம் அளிக்கும் தீயபலனிலிருந்தும் யாரும் தப்பவே முடியாது. எங்கள் தீயபலன் என்பது சீறிக்கிளம்பிவிட்ட துப்பாக்கிக் குண்டு போன்றதாகும். இதை இதயத்தில் வாங்கிக்கொள்வதா? தோளில் தாங்கிக் கொள்வதா என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.
இறைவன் பேரருளாளன். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் எந்தக் கிரகமும் 100% தீயபலனைத் தரும் நிலையில் இருக்காது. அதே நேரம் எந்தக் கிரகமும் 100% நல்ல பலனைத் தரும் நிலையிலும் இருக்காது. எனவே ஒவ்வொரு ஜாதகரும், நான் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களில் ஒரு சிலவற்றிலாவது, கொஞ்சமாவது நற்பலனைப் பெற்றே தீருபவர்கள்.
என் கட்டுப்பாட்டிலிருக்கும் விஷயங்களை முன்பே சொல்லியுள்ளேன். அவற்றில் உங்கள் நிலைக்கு இன்றியமையாதவை எவையோ! அவற்றை மட்டும் தனியே குறித்துக் கொள்ளுங்கள். அவை தவிர மற்ற விஷயங்களை விட்டு விலகியிருங்கள். என்னுடைய தீயபலன் குறைந்து நற்பலன்கள் அதிகரித்துவிடும்.நீங்கள் எதையாவது பெறவேண்டும் என்றால் எதையாவது இழந்துதான் ஆகவேண்டும். 
கால்படி சோறு வேகும் பாத்திரத்தில் அரைப்படி அரிசி வேகவைத்தால் என்ன ஆகுமோ, அதுவேதான் குறைந்த அளவு கிரக பலத்தை வைத்துக்கொண்டு அந்தக் கிரகம் ஆளுமை செய்யும் எல்லா விஷயங்களிலும் பலன் பெற நினைத்தாலும் நிகழும் பாத்திரத்தை (கிரகபலத்தை) மாற்ற முடியாது, என்றாலும் அரிசியைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா! அகல உழுவதைக்காட்டிலும் ஆழ உழுவது நன்றல்லவா?
இதுவரை நான் சொன்னதை வைத்து நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் உள்ளேன் என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களை நீங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக் கூடிய தீயபலன்கள் குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.
6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
2. சந்திரன் பேசுகிறேன்
வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரனாகிய நானே அதிபதி.
நீங்கள் புதுமை, என்றும் இளமை, பொதுமக்கள் ஆதரவு, நீண்ட சுவாசம், திடீர் நன்மைகள், திடீர் பணவரவுகளுடன் வெற்றிமேல் வெற்றி பெறுபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
இதற்கு மாறாக நிலையில்லாத வாழ்க்கை, அடிக்கடி தொழில் மாற்றம், வேதனையுடனான ஊர் மாற்றம், மனச்சோர்வு, நோயாளியான தாய், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சனைகளுடன் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்றால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.
நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).
2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.
4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.
5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.
6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.
7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.
8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.
9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது
3. செவ்வாய் பேசுகிறேன்
இதுவரை உங்களிடம் பேசினார்களே சூரியன், சந்திரன், இவர்களுக்கு மட்டுமில்லை, மற்றுமுள்ள ராகு, குரு, சனி, புத, கேது, சுக்ரன் எல்லோருக்குமே சேனாதிபதி நான் தான். மற்ற கிரகங்கள் தீமை செய்யும் நிலையிலிருந்தால் "சூரியன் பலமிழந்துட்டாரு", "கேது கெட்டிருக்காரு" என்று தான் ஜோதிடர்கள் சொல்வார்கள். நான் தீமை செய்யும் நிலையில் இருந்தால் மட்டும் ஜாதகத்தையே தோஷ ஜாதகம் என்று ஓரமாய் வைத்து விடுவார்கள்!
ஏன் தெரியுமா? என் இலாகா அப்படி! நான் அதிகாரம் செலுத்தும் விஷயங்கள் அப்படி!
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே. 
நீங்கள் ஹை, லோ பிபி, ரத்தசோகை, அல்ஸர் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவரா?
சகோதரர்களே எதிரிகளாகி, பிற எதிரிகளுடன் சேர்ந்து உங்களைத் தொல்லைப்படுத்துகிறார்களா? 
ஏற்கனவே விபத்து, தீவிபத்து எதிலாவது சிக்கியுள்ளீர்களா? 
அறுவை சிகிச்சை நடந்துள்ளதா? காதல் திருமண விசயங்களில் பின்னடைவால் வருந்துபவரா?
"ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.மேற்சொன்ன உபாதைகள் ஏதுமின்றி நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் எந்தப் பிரச்சினையுமின்றி தொழில், வியாபாரம் செய்து வருகிறீர்களா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். 
நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள், என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். 
பரிகாரங்கள்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்
4. ராகுபேசுகிறேன்
சமீப காலமாய்த் திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன். 
இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன? 
கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன். 
நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும்.
சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்! 
நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவார்கள்.
இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். 
சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. 
பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.
பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.
2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.
3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.
4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.
5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்
6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.
7. பரமபதம் ஆடுங்கள்.
8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.
9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.
10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள்.
11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.
5. குருபேசுகிறேன்
"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும். போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள். 
கடந்த பிறவியில் உங்கள் சிரமபலனை அனுபவித்த என் கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். 
பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான். ஆனால் கடன் தீர்க்க வரும் நீங்கள் அதை மறந்து எல்லாவற்றையும் பெறத்துடிக்கிறீர்கள். கடவுளோ உலகப் பொருட்களை 9-ஆகப் பிரித்து நவக்கிரகங்களான எங்கள் பொறுப்பில் விட்டு வைத்துள்ளார். 
சூரியன்-மலைச்சாதியினரையு,ம் சந்திரன்-பிரமுகர்களின் மனைவியர், வைசியரையும், செவ்வாய்–வீரர்கள், சகோதரர்கள், சத்ரியர்களையும், ராகு–பிறமொழியினரை, கேது–பிறமதத்தினரை, சுக்கிரன்–எதிர்பாலினரை, பிராமணக் கர்ப்பிணிப் பெண்கள், சனி–தலித்துக்கள், வேலைக்காரர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 
அதே போல் நான் பிராமணர்கள், மந்திரிகள், சான்றோரை என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். இந்தப் பிறவியில் எந்தக்கிரகம் தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றனவோ கடந்த பிறவியில் அந்தக் கிரகம் தொடர்பான மனிதர்களுக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். 
சரி! சரி! நிறையவே விசயங்களைப் போட்டு உடைத்துவிட்டேன். பிறகு மந்திரி சபைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை எப்படி தன்னிச்சையாக அறிவிக்கலாம் என்று பிரதமர் (கடவுள்) கோபித்துக் கொள்ளப் போகிறார். கடந்த பிறவிகளில் பட்ட கடனைத் தீர்ப்பது முக்கியம். மொத்தமாகத் தீர்ப்பதோ! தவணையில் தீர்ப்பதோ! அவரவரது விருப்பம். தீர்க்கிறேன்-தீர்க்கிறேன் என்று காலம் கழித்தால் கொடுத்தவன் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து விடுவதைப் போலவே நாங்களும் கண்டபடி தீய பலன்களைக்கொடுத்து விடுவோம். 
எங்கள் தீய பலன்களிலிருந்து தப்ப ஒரே வழி நாங்கள் கண்டதையும் பறித்துவிடுமுன்பு நீங்களாகவே 'உங்கள் சாய்ஸ்' படி எங்கள் ஆளுகைக்குட்பட்ட விசயங்களை விட்டுக் கொடுத்து விடுவதே! என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். 
நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!
உங்கள் கதை எப்படி? என் அதிகாரத்துக்குட்பட்ட தங்கம், முன்யோசனை, செல்வாக்கு (அரசியல்), காலாகாலத்தில் கல்யாணம், குழந்தைப்பாக்கியம் யாவும் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில், நன்மை செய்யும் நிலையில் நின்றிருக்கிறேன் என்று அர்த்தம்.
கோர்ட்டு வழக்கு, வட்டிக்குக் கடன் வாங்குதல், லேசான இதயப் படபடப்பு, மறதி, வயிற்றுக்கோளாறுகள், அடிக்கடித் தங்க நகைகள் திருடு போதல், அடகில் முழுகிப்போதல் இவை உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்றுஅர்த்தம். பரிகாரங்கள்நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி. கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக்கூடிய தீமைகள் குறையும்.
பரிகாரங்கள்:
1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.
2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள்.
3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.
4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.
5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.
6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.
7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.
8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.
9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.
10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள்.
11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.
6. சனிபேசுகிறேன்
செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். 
மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 
19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள். 
சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன். 
இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன். 
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. 
சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். 
இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.
நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.
2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.
3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.
4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.
5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.
6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.
7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள்.
8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.
9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.
10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.
11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள்.
12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.
13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
7. புதன்பேசுகிறேன்:
"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.
புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. 
விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். 
புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். 
சரி! உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும். 
பரிகாரங்கள்:
1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.
2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.
3. வியாபாரம் வேண்டாம்.
4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.
5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.
6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.
7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.
8. கள்ள உறவு உதவாது.
9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள்.
10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்
8. கேதுபேசுகிறேன்
கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது. 
இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம். 
பரிகாரங்கள்:
1. எளிமையான வாழ்வு.
2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.
3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.
4. யோகம் பயிலுதல்.
5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.
6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.
7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.
8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.
(குறிப்பு: ராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். )
9. சுக்கிரன்பேசுகிறேன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. 
சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. 
தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. 
ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். 
நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.
பரிகாரங்கள் :
1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும்.
2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.
3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.
4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.
5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும்.
6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.
7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல).
8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும்.
9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.
10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். 

நன்றி: முத்துக்கமலம்.காம் 

No comments:

Post a Comment